புதுடெல்லி:
இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் முக்கியமானது டெல்லி இந்திராகாந்தி விமானநிலையம். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமும் கூட. தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள 3வது முனையத்தில் நள்ளிரவில் வெகு நேரமாக டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. சந்தேகமடைந்த பயணிகள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நள்ளிரவு 1 மணி அளவில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் வந்தனர். மிகவும் எச்சரிக்கையாக கேட்பாரற்று கிடந்த அந்த டிராலி பேக்கை கைப்பற்றினர்.
அதற்குள் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களுடன் தொடர்புடைய பொருட்கள் இருந்தன. வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலைய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான அந்த பையை எடுக்கும் வரை அந்த முனையத்தில் இருந்த பயணிகள் யாரும் வெளியில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.