புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 3-வது முறையாக குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதேபோல் இணையதள பணபரிமாற்ற கட்டணங்களை நீக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.