தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷத் பஷா. கடந்த சனிக்கிழமை அன்று அர்ஷத் பஷா தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார் அவரது பிரேதத்தை கைப்பற்றி ஜக்தியால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் அவரது பிரேதம் மார்ச்சுவரியில் (சவக்கிடங்கு) வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மார்ச்சுவரி ஊழியர்கள் அர்ஷத் பஷாவின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க கொண்டு வந்தனர். அப்போது அவரது பிரேதத்தின் சில பகுதிகளை எலி கடித்து குதறியதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த அர்ஷத் பஷாவின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். குளிர்சாதன பெட்டிக்குள் உள்ள பிரேதத்தை எலிகள் கடிக்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதைதொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த மாவட்ட கலெக்டர் சரத், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.