செய்திகள்

ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திய கல்லூரி மாணவன், தாய் கைது

பேரணாம்பட்டு அருகே போலீசார் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திய கல்லூரி மாணவன், தாயை கைது செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாலு வெங்கட்ராமன் ஆகியோர் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணிக்கு வாகன சோதனை நடத்தினர்.

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் பத்தலப்பல்லி மலை பாதையில் வேகமாக சென்றது. போலீசாரும் அந்த வாகனத்தை துரத்தி சென்றனர். 3-வது கொண்டை ஊசி வளைவில் காரை மடக்கிபிடித்து சோதனை செய்தனர்.

அப்போது 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.

பள்ளிகொண்டாவில் இருந்து ஆந்திரா மாநிலம் வி.கோட்டாவிற்கு ரேசன் அரிசி கடத்தி சென்றுள்ளனர். காரை ஓட்டி வந்த வாலிபர் தனியார் கல்லூரி மாணவர் என்பதும் அவருடன் இருந்தவர் அவருடைய தாய் ஜோதி எனவும் தெரியவந்தது.

2 பேர் மீதும் பேரணாம்பட்டு போலீசார் அரிசி கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வேலூரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT