செய்திகள்

நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும்- ராஷ்டீரிய லோக் சமதா வலியுறுத்தல்

காப்பக விவகாரம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று உபேந்திரா குஷ்வாகா வலியுறுத்தி உள்ளார். #NitishKumar

பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த காப்பகத்துக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிதி உதவி அளித்த தகவல் வெளியானது. அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பீகார் காப்பக விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ராஷ்டீரிய லோக் சமதா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி.) தலைவர் உபேந்திரா குஷ்வாகா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காப்பக விவகாரம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருக்கக் கூடாது. இதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவியில் இருந்தால் விசாரணை நேர்மையாக நடக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உபேந்திரா பா.ஜனதா, நிதிஷ்குமார் கூட்டணியில் தான் இருந்தார். சமீபத்தில் தான் அவர் அந்த கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தார். #NitishKumar

SCROLL FOR NEXT