சிப்காட்(ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள ஒத்தைவாடை தெருவில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சீட்டுப்பண வசூலும் நடத்தி
வந்தது. நிதி நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான தண்டலத்தைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 56) என்பவர் கடந்த 5-ந்தேதி இரவு நிதி நிறுவனத்தைப்
பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை நிதி நிறுவனத்துக்கு வந்தபோது, கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மரக்கதவு
சேதப்படுத்தப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர மேஜையில் உள்ளே வைத்திருந்த சீட்டுப்பணம் ரூ.9 லட்சத்து 36 ஆயிரம்
திருட்டுப் போய் இருந்தது தெரிந்தது.
இதுகுறித்து அவர், ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராணிப்பேட்டை
நவல்பூர் மணியக்காரர் தெருவைச் சேர்ந்த விஜயராகவன் (28) என்பவர் நிதி நிறுவனத்தில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை
போலீசார் கைது செய்தனர்.
அவர், நிதி நிறுவனத்தில் திருடிய பணத்தில் மோட்டார்சைக்கிள் (புல்லட்), நகைகள் ஆகியவற்றை வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்ததாக கூறினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.