பெங்களூர்:
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கொழும்புவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார். பெங்களூர் நகரில் தங்கியிருக்கும் அவர் இன்று காலை 11 மணியளவில் மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பெங்களூர் நகரில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவர் வான்வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல இயலவில்லை. பகல் 12 மணிவரை வானிலை சரியில்லாததால் அவரது பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்பதற்காக உடுப்பியில் ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு காத்திருந்த உடுப்பி நகர துணை கமிஷனர் பிரியங்கா மேரி பிரான்சிஸ்,மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக வர திட்டமிட்டிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-வின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வேறொரு நாளில் அவர் உடுப்பிக்கு வருவார் என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார்.