பாட்னா:
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு பஸ்வானின் உடல் விமானம் மூலம், அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாட்னாவில் உள்ள வீட்டில் பஸ்வானின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது உடல் டிக்ஹா காட் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். டிக்ஹா காட் பகுதியை அடைந்த பஸ்வான் உடலுக்கு அவரது மகன் சிரங் பஸ்வான் இறுதிச்சடங்கு நடைமுறைகளை மேற்கொண்டார்.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமார், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ்சிங், நித்யானந்ராய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பின் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.