மீனவர்கள் சிறைபிடிப்பு 
செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.

மாலை மலர்

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒருதரப்பினர் இந்திய எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க கூடாது என எச்சரித்தனர். தொடர்ந்து சில படகுகளில் ஏறிய கடற்படை வீரர்கள் வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்ப முற்பட்டனர்.

அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தைச் சேர்ந்த கென்னடி, பெனிஸ்டோ, இன்னாசி, நாகராஜ் உள்பட 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர். 7 பேரும் இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.