செய்திகள்

ராமேசுவரம் அருகே கடலுக்கு சென்ற மீனவர் மரணம்- போலீசார் விசாரணை

ராமேசுவரம் அருகே கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்தது குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள மீனவர் காலனியைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 42). மீனவரான இவர், சம்பவத்தன்று சக மீனவர் சுரேஷ் (45) என்பவருடன் நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்றார்.

ராமேசுவரம் அருகே உள்ள தேராங்கோட்டை கடல் பகுதியில் இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிவபாலனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் படகிலேயே மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த சுரேஷ், அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் உதவியுடன் சிவபாலனை மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews