செய்திகள்

மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க.வுடன் ஒன்று சேருவோம்: ஜி.ராமகிருஷ்ணன்

மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க.வுடன் ஒன்று சேருவோம். தேர்தல் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் திருமாவளவன் பேசுகையில், பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

மத்திய அரசு மக்களுக்கு விரோதமாக தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிக்கிறது. பொருளாதார கொள்கை மற்றும் விரோத நடவடிக்கைகளில் காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

பா.ஜனதா, காங்கிரஸ் வழியில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தவறான கொள்கையை கடைப்பிடித்து மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தஇரு கட்சிகளும் மதவாத எதிர்ப்பு கொள்கையை கைவிட்டு விட்டு இரு கட்சிகளும் மத்தியில் பா.ஜனதா அரசில் அங்கம் வகித்து கைகோர்த்து செயல்பட்டன.

இந்த இரு கட்சிகளும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டன. அந்த கட்சிகள் எதிர்காலத்தில் மத்தியில் பா.ஜனதா அரசில் சேரமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைப் பொறுத்த வரை மக்கள் பிரச்சினைக்காகத் தான் தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுகிறோம், போராட்டங்களில் கலந்து கொள்கிறோம்.

ஆனால் இதை தேர்தல் கூட்டணி என்று சொல்ல முடியாது. தேர்தலில் கூட்டணி சேரமாட்டோம்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.