பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவது முழுக்க முழுக்க நன்னடத்தை அடிப்படையில் தான். அந்த வகையில் பார்த்தாலும் முதன்முதலில் விடுதலை செய்யப்பட வேண்டியது பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் தான்.
அவர்கள் தான் தமிழக சிறைகளில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையிலும் முன்னணியில் இருப்பது இவர்கள் தான். இளம் வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன், சிறையில் இருந்தபடியே படித்து ஏராளமான பட்டங்களையும், பட்டயங்களையும் வென்று குவித்துள்ளார்.
மேலும் தம்மைப் போலவே பலரையும் படிக்க வைத்து பட்டம் பெற வைத்துள்ளார். மற்றவர்களும் இதேபோல் நன்னடத்தைக்காக பாராட்டு பெற்றுள்ளனர். இத்தகையவர்கள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் சமூகத்திற்காக உழைக்கவும், கடந்த 27 ஆண்டுகளாக நிறைவேற்றத் தவறிய குடும்பக் கடமைகளை நிறைவேற்றவும் வாய்ப்புக் கிடைக்கும். இதற்காகவே அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
மத்தியப் புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்த சர்ச்சைகளும், நடை முறைகளும் இவர்களின் விடுதலைக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக்கூடாது. அதற்கேற்ற வகையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.