புதுடெல்லி:
கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மக்களவை அலுவல்கள் 1 மணி வரை நடைபெற்றன. பின்னர் நாளை மாலை 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அவையை வழிநடத்தினார். அவை தொடங்கியதும், சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பேனி பிரசாத் வர்மா, அமர் சிங் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் செய்தியை அவைத்தலைவர் வாசித்தார். அதன்பின்னர் ஒரு மணி நேரத்திற்கு அவையை ஒத்திவைத்தார்.
கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 1ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மக்களவை கூட்டம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மாநிலங்களவை கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும்.