செய்திகள்

கேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh

மாலை மலர்

புதுடெல்லி:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 37 பேர் பலியாகினர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

கனமழை பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் பார்வையிட்டனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரளா செல்கிறார். கனமழையல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அவர் பார்வையிடுகிறார். அதன்பின்னர், மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh