சென்னை:
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தடகள வீரர் மாரியப்பனுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தமிழக தடகள வீரர் சேலம் மாரியப்பன் உள்பட 5 பேரின் பெயர்களை தேர்வு குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில்,
தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. மாரியப்பன் தங்கவேலு அவர்களின் சாதனைப் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.