மதுரை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளன், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இதில் ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக பரோல் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரவிச்சந்திரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கியது.
அதன்படி கடந்த 5-ந்தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்த ரவிச்சந்திரன் சொத்து சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்தார்.
பரோலில் இருந்தபோது ரவிச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரவிச்சந்திரனுக்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுடன் அவரது பரோல் முடிவடைந்தது. இதையடுத்து இரவு ரவிச்சந்திரன் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். #Tamilnew