செய்திகள்

தூத்துக்குடியில் ரஜினிகாந்த் - துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், நேரில் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார். #SterliteProtest #Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி விமான நிலையம் சென்ற ரஜினிக்கு அவரது ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரஜினியின் வருகையை ஒட்டி தூத்துக்குடி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வந்த ரஜினி காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்து, நிதி மற்றும் தேவையான பொருட்களையும் வழங்கினார். பின்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினி மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth #SterliteProtest #BanSterlite #SaveThoothukudi

SCROLL FOR NEXT