ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு 
செய்திகள்

ரசிகர்கள்-ஊடகங்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

பாமர மக்களும் என் கருத்துகளை பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கட்சி அறிவிப்பு எப்போது என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட போது சென்னையில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் நேற்றுமுன்தினம் சந்தித்தார்.

அப்போது, ‘தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். அதற்கான வெற்றிடம் இருக்கிறது. அரசியல் மாற்றம் இப்போது இல்லாவிட்டால், இனி எப்போதுமே இல்லை.

நல்ல தலைவர்களை உருவாக்குபவனே ஒரு நல்ல தலைவன். இளைஞராக, படித்தவராக, தொலைநோக்குப் பார்வை உள்ளவராக, அன்பு, பாசம், தன் மானம் கொண்டவராக இருக்கும் ஒருவரைத்தான் முதல்வராக அமரவைக்க வேண்டும்’ என்று பேசினார்.

இதில் உற்சாகம் அடைந்துள்ள அவர் அரசியல் கட்சி தொடங்குவது, முதல் பொதுக்கூட்டத்தை நடத்துவது ஆகியவை தொடர்பான பணிகளில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.