சென்னை:
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு மும்பை புறப்பட்டுச் செல்கிறார்.
உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள தனது அறை பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
குறைந்த ரத்த அழுத்தத்தால், மூளைக்கு செல்லும் ரத்த சுழற்சியில் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக துபாயில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களும் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காலல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலின் முக்கிய உறுப்புகள் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துபாய் நாட்டில் தடயவில் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர்தான் பிணவறையில் இருந்து உடல்களை உறவினர்கள் பெற்றுச் செல்ல முடியும் என்ற நிலையில் ஸ்ரீதேவியின் தடயவில் பரிசோதனை முடிவுகள் கிடப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இன்று மாலை மும்பைக்கு ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தடயவியல் முடிவுகள் உள்ளிட்ட துபாய் அரசின் வழக்கமான விதிமுறைகளை பின்பற்றி, ஸ்ரீதேவியின் உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், நாளை நடைபெறும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தி விமானம் மூலம் இன்றிரவு மும்பை நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். #tamilnews #Rajinkanth #sridevi