செய்திகள்

ஏப்ரல் 14-ல் ‘2.O’ ரிலீஸ்: ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ தகவல்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajinikanthFansMeet ##2PointO

மாலை மலர்

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.

கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி  தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வரலாம் என படக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், சென்னையில் இன்று ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தினார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘2.O’ திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும், தனது அடுத்த படமான காலா படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை இயக்குனர் ரஞ்சித் காண்பித்திருப்பதாகவும், காலாவிற்குப் பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

எனவே, காலா படத்தின் பணிகளை முடித்தபின்னர் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth