செய்திகள்

ராஜஸ்தான்- 5 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

ராஜஸ்தான் மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், கடந்த 2015ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதுபற்றி பெஹ்ரார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் மீது ஆல்வாரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக ராஜ்குமாருக்கு மரண தண்டனை விதித்தார்.

இது அரிதினும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது 10 பேர், குற்றவாளிக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.