செய்திகள்

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையில் இருந்து ராஜா நீக்கம்: ஜெ.தீபா நடவடிக்கை

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையில் இருந்து ராஜாவை நீக்கியுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபாவின் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் ஏ.வி.ராஜா. இவருக்கு கட்சியில் மிகப்பெரிய பதவியை ஜெ.தீபா வழங்கினார். இதனால் ஜெ.தீபாவுக்கும், அவருடைய கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வந்தனர். இந்தநிலையில் ராஜாவை பேரவையில் இருந்து ஜெ.தீபா அதிரடியாக நீக்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக, தொடர்ந்து களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜா விடுவிக்கப்படுகிறார்.

எனவே அவருடன் உறுப்பினர்கள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராஜா மீதான நடவடிக்கையை தொடர்ந்து ஜெ.தீபாவும், மாதவனும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். ஜெ.தீபாவின் காரை தற்போது மாதவன் ஓட்டி வருகிறார்.