செய்திகள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால் வரும் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் பருவமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #NortheastMonsoon #IMD #TNRains

மாலை மலர்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வங்க கடலில் லுபான், டிட்லி என இரு புயல்கள் உருவானதால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்தம் வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நவம்பர் 1-ந்தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை இந்த மாதம் 21-ந் தேதி வரை நீடித்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலும் மழை பெய்தது. அக்டோபர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் 24 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 12 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. இது 50 சதவீதம் குறைவு.