கோப்புப்படம் 
செய்திகள்

சேலம் மாவட்டத்தில் திடீர் மழை

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக சேலத்தில் வெயில் சுட்டெரித்தது. மதிய நேரங்களில் வெயில் மேலும் அதிக அளவில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த 23-ந் தேதி 100.1 டிகிரியாக இருந்த வெயில் 24-ந் தேதி 101.2 டிகிரியாகவும், 25-ந் தேதி 102.2 டிகிரியாகவும், 26-ந் தேதி 101.9 டிகிரியும் பதிவானது. நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 100 டிகிரியாக பதிவானது.

இதனால் இனி வரும் நாட்களில் வெயிவின் தாக்கம் குறையுமா? அல்லது வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா? என்ற அச்சத்தில் பொது மக்கள் இருந்தனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை சேலம் மாநகர், ஓமலூர், ஏற்காடு, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்பட பல பகுதிகளில் பரவலாக பெய்தது.

ஏற்காட்டில் அதிகாலை தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் காலை 9 மணியளவில் மழை பெய்தது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் குடை பிடித்த படி சென்றனர்.

இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியாக இருந்தது. மேலும் இந்த மழை தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.