செய்திகள்

சென்னையில் 200 இடங்களில் மழை வெள்ளம் தேங்கும் அபாயம்

சென்னையில் ராயபுரம், மாதவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர் உள்ளிட்ட 200 பகுதிகள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. #ChennaiRain #ChennaiFlood

மாலை மலர்

சென்னை:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து சென்னையில் மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு எந்தெந்த பகுதிகளில் மழை நீர் தேங்கியது என்பதை கண்டறிந்து அங்கு தேவையான வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது கோட்டூர்புரம், எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, கார்கில் நகர் உள்பட 306 பகுதிகளில் மழை நீர் புகுந்ததில் ஏராளமான உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.

இப்போது மழை காலத்தில் சென்னையில் எங்கெங்கு மழை நீர் தேங்கும்? வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகள் எது என்று வார்டு வாரியாக மாநகராட்சி பட்டியல் எடுத்து வைத்துள்ளது.

பெருங்குடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி ராம் நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, அரும்பாக்கம், அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், ஆலந்தூர், மணப்பாக்கம், வளசரவாக்கம், ராயபுரம், மாதவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர் என மொத்தம் 200 பகுதிகள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோயம்பேடு சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் நீரேற்று நிலையம் ரோடு, காசி தியேட்டர் பகுதி, எழும்பூர் கூவம் ரோடு ஆகிய பகுதிகளும் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் உள்ள வார்டு அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #ChennaiRain #ChennaiFlood