தென் மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அது தாழ்வு மண்டலமாகவே தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக கடந்து உள் மாவட்டங்களுக்கு செல்லும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் உள்மாவட்டங்களிலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடல், மன்னார்வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே இந்தப் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிகப்பட்டுள்ளனர்.
உள்தமிழகத்தில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்திலும் அதிக பட்சம் 50 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.