பழனி:
பழனி ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் சங்கர். (வயது 45). இவர் விருப்பாச்சி ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சுமதி (38) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டு 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுமதி பாண்டியன் நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுமதி தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி வழக்கு தொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் சம்பவத்தன்று தனது மனைவியை பார்க்க குடிபோதையில் சென்றார். என்னிடமே ஜீவனாம்சம் கேட்கிறாயா, என அவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றார்.
படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். #tamilnews