செய்திகள்

டெல்லி: கம்போடிய பிரதமருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய பிரதமர் ஹன் சென்னை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

புதுடெல்லி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய பிரதமர் ஹன்

சென்னுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

கம்போடிய பிரதமர் ஹன் சென் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியாவிற்கு வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கம்போடிய பிரதமரை ஐதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், கம்போடிய பிரதமர் ஹன் சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் நேற்று இரவு சந்தித்து பேசினர்.

அப்போது, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு கம்போடியாவுக்கு ஆதரவு அளித்ததை நினைவு கூர்ந்தார். மேலும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் சேவையையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது என காங்கிரசார் தெரிவித்தனர்.