செய்திகள்

பலவீனமான பிரதமரால் எல்லாமே ‘கசிவு’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் கசிவு விவகாரம் குறித்து, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொறுப்பாளி (பிரதமர்) பலவீனமானவர் என்பதால்தான் இத்தனை கசிவுகள் என குறிப்பிட்டு உள்ளார்.

புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கணிதம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பொருளாதார வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த மாணவ, மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே நன்றாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனச்சோர்வை தந்து உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமூக வலைத்தளத்தில் சாடி உள்ளார்.

அதில் அவர், “எத்தனையோ கசிவுகள் நடந்து விட்டன. சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு, ஆதார் தகவல்கள் கசிவு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வினாத்தாள் கசிவு, கர்நாடக தேர்தல் தேதி கசிவு, சி.பி.,எஸ்.இ. வினாத்தாள்கள் கசிவு, எல்லாவற்றிலும் இப்படி ‘கசிவு’ நடப்பது வழக்கமாகி விட்டது. பொறுப்பாளி (பிரதமர்) பலவீனமானவர் என்பதால்தான் இத்தனை கசிவுகள்” என குறிப்பிட்டு உள்ளார்.  #Tamilnews 

SCROLL FOR NEXT