செய்திகள்

கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மீனாட்சி லேகி தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஏப்ரல் 30ம் தேதி அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நேற்றைய விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

ஆனால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீனாட்சி லேகியின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘வரும் 30-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்’ என குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT