ராகுல் காந்தியுடன் மாணவி ஒருவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகள் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தொடர்புபடுத்தும் வகையில் இருக்கிறது.
வைரல் பதிவுகளில் மொத்தம் மூன்று புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒன்று சஃபியா பென் ராகுல் காந்தியுடன் நிற்கும் போது எடுக்கப்பட்டதாகும். மற்ற இரு புகைப்படங்களும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் லதீனா மற்றும் ஆயிஷா ஆகியோர் டெல்லி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டதாகும்.
வைரல் பதிவுகளில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகவும், போராட்டம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் முழுக்க ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்படுவது அம்பலமாகிவிட்டது என கூறப்பட்டுள்ளது.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் நடத்தப்படுகிறதா என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் வைரல் பதிவுகளில் உள்ள முதல் புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. பள்ளி ஒன்றில் அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைக்க ராகுல் காந்தி சென்றிருந்த போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் நிற்கும் சஃபியா பென் ராகுல் காந்தி உரையை மொழி பெயர்த்தார். அந்த வகையில் போராட்டத்துக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பில்லை என உறுதியாகிவிட்டது.
வைரலாகும் மற்ற இரண்டு புகைப்படங்களும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் போது லதீனா ஃபர்சானா மற்றும் ஆயிஷா ரெனா ஆகிய மாணவிகள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டதாகும்.
முன்னதாக லதீனா ஃபர்சானா மற்றும் ஆயிஷா ரெனா ஆகிய மாணவிகள் சக மாணவரான ஷாஹீன் அப்துல்லாவை காவல் துறையினர் தாக்காமல் இருக்க அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.