செய்திகள்

ராகுல்காந்தி 13-ந்தேதி கேரளா வருகை- காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந்தேதி கேரளா செல்கிறார். கோழிக்கோட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். #Congress #RahulGandhi

மாலை மலர்

திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவில் தற்போது 4 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக காங்கிரஸ் மேலிடம் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந்தேதி கேரளா செல்கிறார். அன்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் கொச்சி செல்லும் ராகுல்காந்தி இரவு கொச்சியில் தங்குகிறார்.

மறுநாள் (14-ந்தேதி) கொச்சியில் இருந்து திருச்சூருக்கு ராகுல்காந்தி செல்கிறார். காலை 10 மணிக்கு அங்கு நடைபெறும் மீன் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசுகிறார்.

அதன் பிறகு புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார் வீட்டிற்கு செல்லும் ராகுல்காந்தி ராணுவ வீரர் படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார்.

அதை தொடர்ந்து பெரியா செல்லும் ராகுல்காந்தி அங்கு சமீபத்தில் கொலையுண்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் வீட்டிற்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

மாலை 4 மணிக்கு கோழிக்கோடு செல்லும் ராகுல்காந்தி அங்கு நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு விமானம் மூலம் ராகுல்காந்தி டெல்லி செல்கிறார். #Congress #RahulGandhi