செய்திகள்

மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்தார்

பிரதமர் மோடியை சுப்ரீம் கோர்ட் திருடன் என்று கூறியதாக பிரசாரம் செய்த ராகுல் காந்தி மீது மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். #RahulGandhi

மாலை மலர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

கடந்த 23-ம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.