பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி 
செய்திகள்

பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வருடன் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் ஓ.பி. சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

மாலை மலர்

சண்டிகர்:

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியது. அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரீந்தர் சிங்குக்கு எதிராக மாறிய நிலையில் அமரீந்தர் சிங் பதவி விலகினார்.

இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக (முதல்வராக) சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது58) தேர்ந்தெடுக்கப்பட்டார். 

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா இன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.  எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் சரண்ஜித் சிங் சன்னி, மாநிலத்தின் 16வது முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால்புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வருடன் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் ஓ.பி. சோனி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்க சுமார் 40 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, மாநில தலைவர் சித்து மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றதும், ராகுல் காந்தியிடம் வாழ்த்து பெற்றார்.

ராகுல் காந்தி இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு ராகுல் காந்தி வந்து விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஓட்டு வாங்க தலிபான் பெயரை பாஜக பயன்படுத்துகிறது: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு