செய்திகள்

குஜராத்தில் வெற்றி பெறலாம் என ராகுல் பகல் கனவு காண்கிறார்: அமித்ஷா கடும் தாக்கு

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என ராகுல் காந்தி பேசி வருவது பகல் கனவாக முடியும் என அமித்ஷா பேசினார்.

மாலை மலர்

இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பா.ஜனதா கட்சியின் முதல்- மந்திரி வேட்பாளராக பிரேம்குமார் துமால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு ஹமீர்பூர் காந்தி சவுக் பகுதியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

“மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. இஸ்ரோ ஊழல், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், ஆதர்ஷ் ஊழல், சி டபிள்யூ.ஜி. ஊழல், நிலக்கரி ஊழல் என கட்டுக்கடங்காத அளவு முறைகேடுகள் நடைபெற்றன.


இத்தகைய ஊழல்களில் இமாச்சல பிரதேச முதல்- மந்திரி வீரபத்திரசிங் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசிவருகிறார். அது அவருக்கு பகல் கனவாக முடியும். ஒரு போதும் அவரது இக்கனவு பலிக்காது.

பிரதமர் மோடி தலைமையின் கீழ் குஜராத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இமாசல பிரதேசத்திலும் பா.ஜனதா வெற்றி பெறும். துமால் அடுத்த முதல் -மந்திரியாக பதவி ஏற்பார்.

பா.ஜனதா ஆட்சி ஏற்பட்டால் தான் இமாச்சல பிரதேசத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எனவே காங்கிரசுக்கு பதிலாக மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

மலைப்பகுதியான இமாச்சல பிரதேசத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. இது மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வழங்கப்பட்டதை விட 2½ மடங்கு அதிகமாகும்”.

இவ்வாறு அவர் பேசினார்.