செய்திகள்

நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்

பிரதமரை கட்டிப்பிடித்தால் இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கலாம் என நீரவ் மோடி தெரிந்து வைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். #PNBScam #RahulGandhi

மாலை மலர்

புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது.

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

நேற்றைய புகாரை அடுத்து தொழிலதிபர் நீரவ் மோடி, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை இன்று சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், நீரவ் மோடி கடந்த மாதம் முதல் தேதியில் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரவ் மோடி மட்டுமல்லாமல், அவரது மனைவி, சகோதரர் என இவ்விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. ஆனால், கடந்த மாதம் அவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 

இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கும் வழிமுறைகள்,

By நீரவ் மோடி

1.மோடியை கட்டிப்பிடிக்க வேண்டும்

2.டாவோஸ் நகரில் சந்திக்க வேண்டும்

இந்த செல்வாக்கை பயன்படுத்தி,

A. 2 ஆயிரம் கோடி ரூபாய் திருட வேண்டும்

B. அரசு பார்வையை திருப்பிய உடன் மல்லையாவை போல நாட்டைவிட்டு ஓடிவிட வேண்டும் 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “முந்தைய ஐ.மு.கூ ஆட்சியின் முடிவுகள் எப்போது வெளிவந்தாலும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #PNBScam #RahulGandhi #PNBFraudCase #TamilNews