ராகுல்காந்தி 
செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களால் காய்கறி விலை உயர்ந்துவிட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்களால் காய்கறி மற்றும் உணவுப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. பெரிய இடைத்தரகர்கள் உருவாகி விட்டனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

மாலை மலர்

மாதேபுரா:

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, நேற்று மாதேபுரா மாவட்டம் பீகாரிகஞ்ச் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். அங்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து ராகுல்காந்தி பேசியதாவது:-

ஊரடங்கின்போது, பிரதமர் மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தடியடி நடத்தி விரட்டியடித்தனர். ஆனால் இப்போது அவர்களிடம் ஓட்டு கேட்கின்றனர்.

பிரதமர் மோடி, தனது இதயத்தில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடம் அளித்திருந்தால், உயிரை விட்டிருப்பார். ஊரடங்கு காலத்தில் நடந்ததுபோல், நடந்திருக்க மாட்டார்.

நிதிஷ்குமார், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், பீகாரை மாற்றிக் காட்டுவதாகவும் கூறினார். ஆனால் எதுவுமே செய்யவில்லை. அவரது பொதுக்கூட்டங்களில், இந்த வாக்குறுதி பற்றி இளைஞர்கள் கேட்டால், அவர்களை மிரட்டுகிறார், துரத்துகிறார்.

மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறியது. ஆனால், உண்மையில் கோடீசுவரர்களுக்குத்தான் விடுதலை கிடைத்துள்ளது.

இந்த சட்டங்கள், புதிய இடைத்தரகர்கள் உருவாக வழிவகுத்துள்ளது. சிறிய இடைத்தரகர்கள் அல்ல, அம்பானி, அதானி போன்ற பெரிய இடைத்தரகர்கள் உருவாகி உள்ளனர்.

உணவு தானியங்கள், நேரடியாக பெரிய குடோன்களுக்கு செல்கின்றன. அங்கு பதுக்கப்பட்டு, செயற்கையான விலை ஏற்றத்துக்கு பிறகு விற்கப்படுகின்றன.

இதனால், புதிய வேளாண் சட்டங்களால் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. சரத்யாதவ் எனக்கு நிறைய கற்றுத்தந்துள்ளார். அவர் எனக்கு குரு போன்றவர்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.