செய்திகள்

அமித் ஷா மகன் லாபம் 16 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு: நீங்கள் காவலரா, கூட்டாளியா? - மோடிக்கு ராகுல் கேள்வி

பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தின் லாபம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதில் நீங்கள் காவலாளியா?, கூட்டாளியா? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது.  ஆனால், 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த தொகையைவிட 16 ஆயிரம் மடங்கு லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.

தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பிரபல இணைய பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி கட்டுரை தொகுப்பையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இணைத்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதே பிரச்சனையை மையமாக வைத்து ராகுல் காந்தி பிரதமருக்கு இன்று கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தின் லாபம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதில் நீங்கள் காவலரா, கூட்டாளியா? ஏதாவது பதில் சொல்லுங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இன்று பதிவிட்டுள்ளார்.