செய்திகள்

ஜூனியர்களுக்கு ராக்கிங் தொந்தரவு: பல்கலை.யில் இருந்து 6 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்

ஆந்திர மாநிலம் நஷ்வித்தில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் ஜூனியர் மாணவர்களுக்கு ராக்கிங் தொந்தரவு அளித்ததாக 6 மாணவர்கள் நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

அமராவதி:

ஆந்திர பிரதேசம் மாநிலம் நஷ்வித்தில் ராஜீவ் காந்தி மத்திய தொழில்நுட்ப பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இங்கு பயிலும் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்ததாக, சீனியர் மாணவர்கள் 54 பேர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ராக்கிங் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதன்படி, 54 பேரில் 6 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாகவும், 9 பேர் ஓராண்டுக்கு வகுப்புகளுக்கு அனுமதிக்காமல், நேரடியாக தேர்வுகளை மட்டும் எழுதுமாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீதம் உள்ள மாணவர்கள் 2 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கிங்கில் ஈடுபடுவது மிக மோசமான குற்றம் என அனைத்து மாணவர்களும் அறியும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.