மதுரை:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27-ந்தேதி நேரில் வந்து திறந்து வைக்கிறார். இந்த மணிமண்டபம் புனித தலமாக திகழும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக வெங்கையாநாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். இவரை தேர்வு செய்தது தமிழ்நாட்டுக்கு பெருமையான ஒன்றாகும்.
ஜனாதிபதி அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. ஆனால் திருமாவளவன் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருகிறார்.
தமிழக அரசு தற்போது தான் செயல்ட தொடங்கி உள்ளது. நடிகர் கமலஹாசன் கூறிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை அமைச்சர்கள் கூறுவது தேவையற்ற ஒன்றாகும். தமிழக அமைச்சர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
அமைச்சர் சி.வி. சண்முகம், நடிகர் கமல ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கமல ஹாசன் மீது கூறியுள்ள கருத்துகளும் வன்கொடுமைதான்.
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மாற்றம் செய்யப்பட்டது மாநில அரசின் பிரச்சினை.அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.