செய்திகள்

ஸ்மித்தை இடித்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட ரபாடா- நடவடிக்கை பாய்கிறது

விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஸ்மித் தோளுடன் இடித்து, ரபாடா சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை பாய இருக்கிறது. #SAvAUS

மாலை மலர்

ஸ்மித்தை அவுட்டாக்கிய சந்தோசத்தில் ரபாடா ஆர்ப்பரித்தார். அத்துடன் ஸ்மித்தை நோக்கிச் சென்று தோள்பட்டையில் இடித்தார். இதனால் ஸ்மித் விரக்தியடைந்தார்.

ஏற்கனவே முதல் டெஸ்டில் வார்னர் - குயிண்டான் டி காக் இடையே மோதல் ஏற்பட்டதால் வீரர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் கேட்டுக் கொண்டது. போட்டி நடுவர் இரு நாட்டு கேப்டன்களையும அழைத்து பேசியது. இந்நிலையில் ரபாடா இப்படி செயல்பட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரபாடா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது, இலங்கை வீரர் டிக்வெல்லாவுடன் மோதியதற்காக 50 சதவீத அபாரதம் பெற்றவுடன், தடைக்கான டிமெரிட் புள்ளிகள் மூன்றை பெற்றார்.

அதன்பின் ஜூலை மாதம் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸிற்கு எதிராக தகராறில் ஈடுபட்டார். இதற்கு ஒரு டிமெரிட் புள்ளி கொடுக்கப்பட்டது. நான்கு டி மெரிட் புள்ளிகள் பெற்றதால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளில் (எது முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில்) விளையாட தடைவிதிக்கப்படும். அதன்படி 2-வது டெஸ்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

24 மாதத்திற்குள் 8 புள்ளிகள் பெற்றால் இந்த தடை இரட்டிப்பாகும். இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியின்போது தவான் அவுட்டாகியபோது, டாடா காட்டி வெளியேற்றினார். இதற்கு 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. இத்துடன் ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளார்.

தற்போது ஸ்மித்துடன் மோதியது குற்றச்சாட்டு லெவல் இரண்டிற்குள் வருகிறது. இதற்காக குறைந்தது மூன்று டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும். ஒருவேளை மூன்று புள்ளிகள் வழங்கப்பட்டால், கடைசி இரண்டு டெஸ்டிலும் ரபாடாவால் விளையாட முடியாது.