செய்திகள்

விமானப் பணிப்பெண்களை பாட்டிகள் என விமர்சித்த கத்தார் ஏர்வேஸ் நிர்வாகி மன்னிப்பு கேட்டார்

அமெரிக்க விமானப் பணிப்பெண்களை பாட்டிகள் என விமர்சித்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

மாலை மலர்

தோஹா:

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பெக்கர் கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் அமெரிக்க விமானச் சேவை நிறுவனங்களை படுமட்டமாக விமர்சித்தார்.

பயணிகளுக்கான சேவையை பொருத்தமட்டில் அமெரிக்க விமானங்களின் குப்பைக்கு நிகரானது என குறிப்பிட்ட அவர், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் 26 வயதுக்கு குறைவானவர்களே... ஆனால், அமெரிக்க விமானங்களில் செல்லும் பயணிகளுக்கு உபச்சாரம் செய்யும் பணிப்பெண்கள் பெரும்பாலும் பாட்டிகளாகவே இருக்கிறார்கள் என அவர் கிண்டலடித்தார்.

அல்பெக்கரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து, தனது கருத்துக்கு அல்பெக்கர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக 50,000 விமான உதவியாளர்கள் மற்றும் பணிப்பெண்களை அங்கத்தினராக கொண்டுள்ள தலைமை சங்கத்துக்கு அவர் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, அல்பெக்கரின் மன்னிப்பு கடிதம்

ஏற்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சாரா நெல்சன் தெரிவித்துள்ளார்.