பூரி ஜெகநாதர் ரத யாத்திரை 
செய்திகள்

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது- லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பூரியில் உலகப்புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியில் குவிந்துள்ளனர்.

மாலை மலர்

ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவில், வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஜெகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் ஆண்டுதோறும் தனித்தனியாக மூன்று ரதங்களில் ஏறி, பூரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். மூன்று தெய்வங்களும் தங்கள் அத்தையான குண்டிச்சா கோவிலுக்கு சென்று தங்கிவிட்டு திரும்புவார்கள்.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதற்காக மூன்று பிரமாண்ட தேர்கள் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலதேவரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கருப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருளினர். இதையடுத்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

10 நாட்கள் ரத யாத்திரை விழா நடைபெற உள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் மக்கள் வருவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரி நகரில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற ஊர்களைப் போல் அல்லாமல் பூரியில் மட்டும் ஆண்டுதோறும் ரத யாத்திரைக்கான தேர்கள் புதிதாக செய்யப்பட்டு ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக ஒடிசா மாநில வனத்துறை மரங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.