செய்திகள்

வரதட்சணை கொடுமை - பெண்ணை ஹாக்கி ஸ்டிக்கால் சரமாரியாக அடித்த கணவரின் சகோதரர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் வரதட்சணை கேட்டும், பெண் பிள்ளை பெற்றதாக கூறி பெண் ஒருவரை அவரது கணவரின் சகோதரர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாலை மலர்

சண்டிகர்:

அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும் வரதட்சணை கொடுமை , பெண் சிசு அழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் இன்னும் இருந்து வருகின்றன. அதற்கு உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் மீனா கசப். இவர் பெண்குழந்தை பிறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தனது கணவர் தல்ஜேட் சிங்கிடம் இருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார். அதன் பின்னரும் அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வரதட்சணை தரவில்லை  என்றும், பெண்குழந்தை பெற்றததற்காகவும்  கணவரின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மீனா கசப்பை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில்,’என் மகளுக்கு திருமணமாகி இரண்டு வருடமாகிறது. அவளுக்கு பெண்குழந்தை உள்ளது. அவள் குடும்பத்தில் உள்ளவர்கள் வரதட்சணை ரூபாயாக 7 இலட்சம் கேட்டு கொடுமைப்படுத்தினர். மேலும் பெண்குழந்தை பிறந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இது குறித்து சென்ற வருடமே புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’  என தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து போலீசார் மீனா கணவரின் சகோதரர் மற்றும் அவர் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.