மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார்.
இதையடுத்து 16-ந் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயிகள் மலர், விதைகள் தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி தண்ணீரை வரவேற்றனர். நேற்று காலை நாகுடிக்கு தண்ணீர் குறைந்த அளவு சென்றுள்ளது. அங்கும் விவசாயிகள் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து சுமார் 300 கன அடி வரை புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தண்ணீர் வேகமாக வந்ததால் மேலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் தண்ணீரின் வரத்து அளவை குறைத்தனர். இருப்பினும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் சென்றது. சுமார் 50 பேருக்கு மேல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டநிலையில், மதியத்திற்கு பிறகு தடுப்புக்கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தொடங்கியபோது தடுப்புக்கட்டைகள் உடைந்து, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மண், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணும் கொண்டு வந்து கொட்டப்பட்டது. சீரமைப்பு பணிகளை பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.