புதுச்சேரி

மேற்குவங்க தேர்தல்: புதுவையில் கட்டுமான பணிகள் பாதிப்பு

தற்போது தேர்தலுக்காக சென்றுள்ளதால் குறைந்தபட்சம் 2 வாரத்துக்கு பின்பே திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி:

தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், புதுவையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பீகார், மேற்கு வங்காளம், அசாம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து தென்மாநிலங்கள் அனைத்திலும் தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். கட்டுமானம், ஓட்டல்கள், பண்ணைகள், விவசாயம், தொழிற்சாலைகள் என அனைத்து துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது.

புதுவையிலும் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் உள்ளது. குறிப்பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் புதுவையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த சந்திரநாகூர் பகுதி புதுச்சேரி பிராந்தியமாக இருந்ததும் ஒரு காரணமாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் நாளை வியாழக்கிழமை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக புதுவையில் பணியாற்றி வந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் பெரும்பாலோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை மட்டுமே சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்புவார்கள்.

அப்படி செல்லும்போது குறைந்தபட்சம் 15 முதல் ஒரு மாதம் வரை அவர்கள் விடுமுறை எடுப்பார்கள். தற்போது தேர்தலுக்காக சென்றுள்ளதால் குறைந்தபட்சம் 2 வாரத்துக்கு பின்பே திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் புதுவையில் பல இடங்களில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. அதேபோல ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட், தொழிற்சாலைகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.