புதுச்சேரி:
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக அரசியல் மற்றும் தேச தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர்.
இன்று புதுவையில் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்தனர். சட்டமன்றம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்தனர். அதன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்த அவர்கள் விஜய்க்கும் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த புஸ்சி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து தலைவர்களுக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். விஜய்யின் உத்தரவுப்படி இதனை செயல்படுத்து வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் 20 இடங்களில் விலையில்லா விருந்தகம் நடத்தப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விஜய் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்னும் பல இடங்களில் இந்த விருந்தகம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் விஜய் மக்கள் இயக்கம் நுழைந்தது போல சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் நுழையுமா ? என்ற கேள்விக்கு அனைத்தையும் விஜய் முடிவு செய்வார் என கூறி புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டார்.