புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
கடந்த 2008ம் ஆண்டு காங்கிரஸ் முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி பதவியிலிருந்து வெளியேற்றினர். ஆனால், தேர்தலுக்கு நெருக்கம் வரை 2 ஆண்டுகள் வரை ரங்கசாமி மவுனம் காத்து வந்தார்.
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய பிறகு, கடலூர் சாலை ரோடியர் மில் திடலில் மாநாட்டு நடத்தினார். அந்த மாநாட்டில் 4 மணி நேரம் தொடர்ந்து பேசினார்.
இதன்பிறகு தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் சந்தித்தார். தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றார். சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆட்சி அமைத்து முதல்- அமைச்சரானார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் தவெக தலைவர் விஜய்க்கும் இடையில் நட்புணர்வு உள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். அவர் முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கும் விஜய்க்கும் இடையில் பாலமாக இருந்து நட்பை உருவாக்கியுள்ளார்.
இதனால் இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். போன் மூலமும் பேசி வருவது வழக்கம். விஜய் தவெக தொடங்கிய போது தேதி, நேரம் ஆகியவற்றை ஜோதிட ரீதியாக முதல்- அமைச்சர் ரங்கசாமி குறித்து தந்தார்.
அதுபோல் முதல் விக்ரவாண்டி மாநாட்டுக்கும் நேரம், தேதி குறித்து தந்தார். ரங்கசாமி பாணியில் தேர்தலை சந்தித்தது மட்டுமில்லாமல் வேட்பாளர்களை ஜாதகம் பார்த்து தான் தேர்வு செய்வார். விஜய்யும் தனது ஆஸ்தான ஜோதிடர் மூலம் ஜாதகம் பார்த்து தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் சமயங்களில் எதிரிகளை சம்ஹாரம் செய்த மூர்த்தியான சிவசுப்ரமணியரை திருச்செந்தூர் சென்று ரங்கசாமி வழிபாடுவார். அதுபோல் தவெக தலைவர் விஜய்யும் திருச்செந்தூர் சென்று வழிபட்டார்.
ரங்கசாமி பாணியில் தவெக தலைவர் விஜய்யும் பிரசாரம் செய்தார். கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை ரங்கசாமி பிடித்தார். அதுபோல் விஜய்யும் 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனைகளை விஜய் கேட்டு கொண்டு வருகிறார். இதனால் பதவி ஏற்பு தேதி, நேரத்தை கணித்து தருவார் என தெரிகிறது.