கோப்பு படம். 
புதுச்சேரி

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மாகி மீனவர்களுடன் கலந்துரையாடல்

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம்ரூபலா, கடந்த ஆண்டு மார்ச்சில் குஜராத்தில் சாகர்பரிக்ரமா எனும் திட்டத்தை தொடங்கினார்.யூனியன் பிரதேச மீனவர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வருகிறார்

புதுச்சேரி:

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம்ரூபலா, கடந்த ஆண்டு மார்ச்சில் குஜராத்தில் சாகர்பரிக்ரமா எனும் திட்டத்தை தொடங்கினார்.

இதன்படி ஒவ்வொரு கட்டமாக கடற்கரையுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேச மீனவர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வருகிறார். 6-ம் கட்டமாக கேரளா, லட்சத்தீவு கடற்கரை மீனவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

கோழிக்கோடு வழியாக இன்று புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்துக்கு மத்திய அமைச்சர் வந்தார்.

புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாகி மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மாகியில் துறைமுகம் கட்ட அடிக்கல் நாட்டி 20 ஆண்டாகிறது. துறைமுக திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் புதுவை அரசு சார்பில் வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றித்தருவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.