புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஸ்பெயின் நாட்டினர் தேங்காய் உடைத்து வழிபாடு

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் புதுவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபடுவார்கள்.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலை சுற்றி பார்த்தனர்.

அப்போது மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர். அவர்களிடம் ஸ்பெயின் நாட்டினர் எதற்காக இவ்வாறு தேங்காய் வீசி உடைக்கிறீர்கள் என்று இருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்டு வியந்த ஸ்பெயின் நாட்டவர்கள் அருகில் உள்ள கடையில் தேங்காய்களை வாங்கி உடைத்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.